states

img

ஜம்மு-காஷ்மீர் விற்பனைக்கா?

ஜம்மு-காஷ்மீரில் தற்போதுள்ள அரசாங்கம் பல இடங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருப்பதற்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் தற்போதுள்ள அரசாங்கம் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் வீடு மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான திட்டங்களுக்காக கார்ப்பரேட்டுகளுடன் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது. இதற்காக வேளாண் நிலைங்களையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருக்கிறது.

திங்கள் அன்று ஜம்மு-காஷ்மீர் ரியல் எஸ்டேட் உச்சிமாநாடு ஜம்முவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர விவகாரங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாக அமைச்சகம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இவ்வாறு கையெழுத்திட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் குளோபல், சம்யக் குரூப், ரௌனக் குரூப், ஹிரானந்தானி கன்ஸ்ட்ரக்சன்ஸ் முதலானவையும் அடங்கும்.

இதற்கான விழாவில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் துணை ஆளுநர் மனோஜ் சின்கா, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரலாற்றுசிறப்புமிக்கவை என்றும், இது இப்பிராந்தியத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் என்றும் கூறினார்.  

கடந்த சில ஆண்டுகளில் இப்பிராந்தியம் நல்லாட்சி மாற்றத்தைக் கண்டது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது என்றும் அவர் மேலும் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் வர்த்தகம் செய்ய இருந்தவந்த முட்டுக்கட்டைகள் நீக்கப்பட்டுவிட்டன என்றும், இப்போது ஜம்மு-காஷ்மீர் வர்த்தகம் புரிவதற்கும், முதலீடு செய்வதற்கும் கவர்ச்சிகரமான ஒன்றாக மாறிவிட்டது என்றும் புளகாங்கிதம் அடைந்தார்.

இதுதொடர்பாக அரசின் சார்பில் அதன் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம், நேஷனல் ரியல் எஸ்டேட் டெவலப்மெண்ட் கவுன்சிலுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும், இது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்றும், இதன்கீழ் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு மின்சார வேலைகள், பிளம்பிங் மற்றும் கொத்தனார் வேலைகள், தச்சு வேலைகளிலும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

துணை ஆளுநர் கூறுகையில் இதேபோன்று ஸ்ரீநகரில் மற்றொரு உச்சிமாநாடு வரும் மே 21-22 தேதிகளில் நடைபெறும் என்றும், அதற்காகப் பயன்படுத்த அரசாங்கம் ஆறாயிரம் ஏக்கர் நிலத்தைப் பார்த்து வைத்திருப்பதாகவும் நில உபயோகத்தை மாற்றியமைப்பதற்காக சட்டவிதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் விற்பனைக்கு

இவ்வாறு அரசு மேற்கொண்டுள்ள வேலையானது, இந்தப் பிராந்தியத்தை கார்ப்பரேட்டுகளுக்கு “விற்பனை” செய்யும் ஒன்றேயாகும் எனக் கடும் வார்த்தைகளில் விமர்சித்துள்ளன.

“ஒன்றிய அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் இப்போது முன்னுக்கு வந்துவிட்டது. ஆட்சியாளர்கள், லடாக்கில நிலம் அளிப்பதாகவும், வேலைகள் அளிப்பதாகவும், குடியிருப்பு சட்டங்களை உருவாக்குவதாகவும், மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதாகவும் கூறும் அதே சமயத்தில், ஜம்மு-காஷ்மீரில் நேரெதிராக நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு விற்கப்படும் என்று கூறியிருக்கிறது. முதலீட்டாளர்கள் காஷ்மீரில் வாங்குவதற்கு முன் ஜம்முவில் நிலத்தை வாங்குவார்கள். ஜம்மு மக்கள் இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தன் ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்திருக்கிறார்.

“இது, இப்பிராந்திய மக்களை மேலும் வலுவிழக்கச்செய்யும் வேலையே தவிர வேறல்ல” என்று பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார். அவர் மேலும்,   “இவ்வாறாக ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டவிரோதமாக நீக்கப்பட்டது. இப்போது முஸ்லீம் மக்களின் பெரும்பான்மையை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசு மிகவும் வெட்கங்கெட்ட முறையில் எங்கள் வள ஆதாரங்களை சூறையாடி, விற்பதற்கு முன்வந்திருக்கிறது. இவற்றின் நோக்கம் எங்கள் அடையாளத்தையும் இப்பிராந்தியத்தில் நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஒரே நோக்கம்தான்” என்றும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துள்ளார்.

(ந.நி)